22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்: நீதி அமைச்சருக்கு சவால்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
தற்போது நாட்டில் சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10 லட்சம் வழக்குகள் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் இருக்கின்றன.
நிலைமை இவ்வாறிருக்க, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும்?
எனவே, இந்த 22ஆவது திருத்தச் சட்டமூலம் தேவையற்றது மற்றும் ஏற்புடையதல்ல என்பதை நிரூபிப்பதற்கு எம்மிடம் தர்க்கரீதியான வலுவான காரணங்கள் உள்ளன.
அதேபோல், இந்தத் திருத்தச் சட்டமூலம் சரியானது மற்றும் நியாயமானது என்பதை நீதி அமைச்சர் தர்க்கரீதியாகச் சபைக்கும் மக்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, இது குறித்து நேருக்கு நேர் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறு நீதி அமைச்சருக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.




