கோழிப்பண்ணைமீது நரிக்கு ஏன் அக்கறை? கடுப்பாகிய நீதி அமைச்சர்
நீதித்துறை பற்றி எதிரணி உறுப்பினர்கள் பேசுவதானது, கோழிப்பண்ணை மீது நரி அக்கறை காட்டுவது போல் உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம்.
கடந்த காலங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு விதத்திலும், சாதாரண மக்களுக்கு வேறு விதத்திலுமே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கட்சி தாவினால் வழக்குகள் மாயமாகும் நிலையும் அன்று இருந்தது.
நீதியரசருக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது. நீதிபதியின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
இவ்வாறான ஆட்சியில் இருந்தவர்கள்தான் இன்று சட்டத்தின் ஆட்சி பற்றி எமக்கு பாடம் எடுக்கின்றனர். இவர்களின் கதையானது கோழிப்பண்ணை மீது நரிகள் இரக்கம் காட்டும் கதை போல் உள்ளது” – என்றார்.




