மிச்சிகனை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்: 5 பேரை கொன்ற சந்தேக நபர் சடலமாக மீட்பு
வடக்கு மிச்சிகனில் வெள்ளிக்கிழமை (15) ஐந்து பேரைக் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மிச்சிகன் மாநிலக் காவல் துறை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.
மிச்சிகனின் மிஸாக்கி கவுண்டியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, காலை 11:40 மணியளவில் (1540 GMT) காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.
அங்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையிலும், நான்காவது நபர் காயமடைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலக் காவல் துறை தெரிவித்துள்ளது.
39 வயதான சாட் ஹிக்மேன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், காவல்துறையினர் வருவதற்கு முன்பே சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதால், அவரைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
சந்தேக நபரைத் தேடும் பணியின் போது, மற்றொரு வீட்டில் ஐந்தாவது நபர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர், விட்லாக் ஏரிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அருகே ஹிக்மேனின் வாகனத்தை ரோந்துப் படையினர் கண்டறிந்தனர். அங்கு ஹிக்மேன் மற்றும் மற்றொரு நபர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
“இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களுக்கு மிகுந்த மனவேதனையளிக்கிறது; அதேவேளையில் புலனாய்வு அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது,” என்று காவல் துறையின் அறிக்கையில் லெப்டினன்ட் ஆஷ்லி மில்லர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அவர்களின் பெயர்கள், வயது அல்லது பாலினம் குறித்த விவரங்களைக் காவல் துறை வெளியிடவில்லை.
மேலும், காயமடைந்த ஒரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.




