ஈரானுக்கு இறுதி வாய்ப்பு: தவறவிட்டால் அழிவு நிச்சயம்
“ ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை அந்நாடு சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிலுள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது கடந்தவார இறுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டிருந்தன.
இதனால் மேற்காசியாவில் மோதல் தீவிரமடையும் சூழல் உருவானது. இந்நிலையில், அந்த தாக்குதல் திட்டம் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்ப் உறுதி செய்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து விவரித்திருந்தார்.
ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இந்த பேச்சுவார்த்தை மூலம் அவர்கள் தரப்பில் (போர் நிறுத்த) ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் சர்வ நாசத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தேன் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற கப்பல் போக்குவரத்து, ஈரானின் வசம் உள்ள அணுசக்தி விவகாரம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும். பேச்சுவார்த்தையின் நிலை குறித்த விவரம் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்று ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.




