சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகவும் கூடியது.
சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், கடற்கரையைப் பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது.
குழு, இதுவரை மேற்கொண்ட களப் பரிசோதனைகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாண கடற்கரைகளில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள், அரச காணிகளை ஆக்கிரமித்தல், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல் ஆகியவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்கள் கோரப்பட்டதுடன், அது குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு அறிவுறுத்தியது.
மேலும், அருகம்பே கடற்கரையில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்தும் இடைக்கால அறிக்கையைப் பெறுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், குறித்த அறிக்கைகளைத் தயாரிக்கும் போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண காணிப் பாதுகாப்பு குழுவின் தலைவர் சேனக பல்லியகுருகே உள்ளிட்ட குழுவின் ஏனைய அரச அதிகாரிகள், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி. பி. டர்னி பிரதீப் குமார, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.டபிள்யூ.எம்.பி.எஸ்.சி. பாலமகுபுர, வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




