கிளிநொச்சியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில், எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அப்பகுதி ஊடாகச் சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு அருகில் சடலம் ஒன்று தீயில் கருகிய நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பேரில் துரிதமாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது எவரேனும் கொலை செய்து உடலைத் தீயிட்டு எரித்துச் சென்றனரா என்ற கோணங்களில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக சான்றுகள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




