பானி பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடிஹ் பகுதியில் வீதியோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலும் பானி பூரி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முஃபசில் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் உயிரிழப்பிற்கு உணவு விஷம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பானி பூரி விற்பனையாளர் தலைமறைவானதையடுத்து அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 18 நோயாளிகளின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விசாரணை அறிக்கைகள் கிடைத்த பிறகு சரியான காரணம் உறுதி செய்யப்படும் என சிவில் சர்ஜன் வைத்தியர் பச்சா பிரசாத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.





