லிபியாவின் கிழக்கு கடற் பகுதியில் புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு
லிபியாவின் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் 15 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
அவர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து இந்த உடல்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என கடற்படை வட்டாரம் நம்புகிறது.
குறித்த படகில் சுமார் 61 பேர் பயணித்ததாக உயிர் பிழைத்த 10 பேர் தெரிவித்துள்ளனர்.
எகிப்திய எல்லைக்கு அருகிலுள்ள டோப்ருக் (Tobruk) நகரின் கடற்கரையோரம் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், இன்னும் பல உடல்கள் கண்டெடுக்கப்படலாம் என்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு இடைவழிப் பாதையாக லிபியா மாறியுள்ளது. அவர்கள் பாலைவனம் மற்றும் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பாதைகளைக் கடந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.





