ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது -மஹிந்த
ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித நாளான வெசக் போயா தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை.
மே தினத்திற்குப் பதிலாக அன்றைய தினம் சமய வழிபாடுகள் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.
நிச்சயமாக அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாரியளவிலான திட்டத்தை எமது கட்சி வகுத்துள்ளது. அரசியல் சவால்கள் மற்றும் மாற்றங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையாகத் தயாராகவே உள்ளது.





