ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சர் பியசேனவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு அவர், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றியபோது உரிய சட்ட நடைமுறைகளை மீறி காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.
காலி மாவட்டத்தில் உள்ள தனது அரசியல் ஆதரவாளர்களுக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒழுக்காற்று காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு முன்னாள் அமைச்சர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்துள்ளதாக அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் முன்னாள் அமைச்சரை தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.
சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் ஒகஸ்ட் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.





