இந்திய துணை ஜனாதிபதிக்கு தமிழரசுக் கட்சி அவசரக் கடிதம்!
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள் வருகை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நேற்று எம்முடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காகவும், அந்தச் சந்திப்பின் போது இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் தமிழ் அகதிகள் தொடர்பாகத் தாங்கள் வெளியிட்ட ஆக்கபூர்வமான கருத்துக்களுக்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிச் செய்தியில் உள்ளவாறு, இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இளைஞர் ஒருவர் நேற்று முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நாம் ஏற்கனவே பேசிக்கொண்டதற்கிணங்க, மேற்படி இளைஞரின் மீள் வருகைக்காக இந்திய அரசின் தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களைத் துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்க வேண்டும்.
அதேவேளையில், இவரைப் போலத் தாயகம் திரும்ப விரும்பும் ஏனைய அகதிகளுக்கும் தங்களது அரசுத் தரப்பிலிருந்து செய்யப்பட வேண்டிய நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.






