ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா – ஈரான்
ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் ஈரானின் மூன்று எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத பாதைகளில் பயணித்த மூன்று எண்ணெய் தாங்கிப் படகுகளைத் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையத்திற்கு அருகிலுள்ள கார்க் தீவு (Kharg Island) கரைக்கு அப்பால் உள்ள ஒரு கப்பல் உட்பட மூன்று ஈரானியக் கலன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர், “எமது இரண்டு கப்பல்கள் மீது நீங்கள் தாக்குதல் நடத்தினால், உங்களின் மூன்று கப்பல்களை அழித்து மேலும் அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்துவோம் என்ற தெளிவான செய்தியை ஈரானியப் புரட்சிகரக் காவல் படைக்குப் புரியவைக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவக் கலன்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரானியப் புரட்சிகரக் காவல் படை எச்சரித்துள்ளதுடன், மூன்று எண்ணெய் தாங்கிப் படகுகள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய மூன்று கலன்களைத் இலக்கு வைத்ததாகவும் பின்னர் தெரிவித்துள்ளது.
போருக்கு முன்னர் உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை ஏந்திச் சென்ற முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகையை விதித்தது.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றங்கள் உலகளாவிய விநியோகக் கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ப்ரென்ட் (Brent) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உச்சபட்சமாக 96.28 டொலராக உயர்ந்து நிறைவடைந்தது.




