செம்மணியில் கைக்குழந்தையின் என்புத் தொகுதி மீட்பு!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 10ஆம் நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி உட்பட நான்கு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
முன்னதாக அடையாளம் காணப்பட்டவற்றிலிருந்து, ஒரு சிறு குழந்தையின் என்புத் தொகுதி உட்பட இரண்டு மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
247ஆம் இலக்கமிடப்பட்ட சிறு குழந்தையின் என்புத் தொகுதியானது, சேதமடையாத வகையில் மண்ணோடு சேர்த்து பதப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த என்புத் தொகுதி இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 10 நாள்களில், மனித எச்சங்களுடன் தொடர்புடைய 14 முக்கிய சான்றுப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
82 முதல் 96 வரை இலக்கமிடப்பட்ட இந்தச் சான்றுப் பொருள்கள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாவது மற்றும் இரண்டாவது அகழ்வுத் தளங்களில் இருந்து இதுவரை மொத்தமாக 259 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 254 மனித என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைக்குழந்தைகளின் எச்சங்கள் மீட்கப்பட்டு வருவது, இப்பகுதியில் இடம்பெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்களின் கோர முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





