துனியாவில் ஜனாதிபதிக்கு எதிராக அணித்திரண்ட மக்கள் – பதவி விலக வலியுறுத்தல்
துனியாவில் ஜனாதிபதியான கைஸ் சயீத் (Kais Saied) உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள், ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் அரசாங்கத்தின் திறமையற்ற பொருளாதார மேலாண்மை ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற மிகப்பெரிய பொதுப் போராட்டமாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி அவசரகால அதிகாரங்களைக் கைப்பற்றியதிலிருந்து அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
துனிசியாவில் பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுக் கலவரங்களுக்குப் பிறகு, நீண்டகால சர்வாதிகாரியான ஜைன் எல் அபிடின் பென் அலி, ஜனவரி 2011-ல் பதவி விலகினார்.
நாட்டின் முதல் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அரசியல் சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும், தற்போதைய ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கின் காரணமாக, அந்த அரசியல் சுதந்திரங்களும் ஜனநாயக ரீதியான முன்னேற்றங்களும் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.




