காசா நிவாரணக் குழுவினர் மீதான இஸ்ரேலின் இழிவான செயல்: வலுக்கிறது எதிர்ப்பு!
காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற தன்னார்வ குழுவினரை (Flotilla activists) இஸ்ரேல் இராணுவம் சிறைபிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படும் வீடியோவை இஸ்ரேலின் அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
Welcome to Israel என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சர்வதேச சமூக ஆர்வலர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில், முழங்காலிட்டு, தலைகளை தரையில் முட்டியவாறு அமரவைக்கப்பட்டுள்ளனர்.
பின்னணியில் இஸ்ரேலின் தேசிய கீதம் ஒலிக்கிறது. அமைச்சர் பென்-க்வீர் ஆக்ரோஷமாக இஸ்ரேலிய கொடியை அசைத்தபடி அவர்களை நோக்கி சத்தமிடுவதும் அதில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் “அதிர்ச்சியூட்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியிருக்கும் இஸ்ரேலிய அமைச்சர் பென்-க்வீரின் இத்தகைய இழிவான செயலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டிப்பதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்குமாறு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறைக்கு (DFAT) உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அஸ்தோத் (Ashdod) துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 11 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




