ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் : திரும்பிச் சென்ற கப்பல்கள்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சிக்கலாகியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற கப்பல்கள் திடீரெனத் திரும்பிச் சென்றதாக, கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
வாகனங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் மொத்த சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட சில கப்பல்கள் தொடர்ச்சியாகத் திடீரெனத் திரும்பிச் சென்ற வேளையில், வேறு பல கப்பல்கள் அந்த நீர்வழியின் ஈரானியப் பக்கத்திற்கு மிக அருகில் பயணித்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹோர்மூஸ் ஜலசந்தியில் ஈரான் தனது பிடியை இறுக்கியுள்ளது. “ஹோர்முஸ் நீரிணை என்பது பிராந்தியங்களைக் கடந்த சக்திகளின் இராணுவக் காட்சிக்கான ஒரு ‘நாடகக் களம்’ அல்ல” என்று ஈரானிய அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஜலசந்தியின் பாதுகாப்பு ஈரான் மற்றும் ஓமானின் முழுப் பொறுப்பாகும் என்றும் ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி, வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




