மாகாணசபைத் தேர்தல் நடக்குமா?
மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கும் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அதேபோல ஜனநாயகம் என்ற போர்வையில் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட முடியாது என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு ,
“நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் எல்லாம் சட்டத்தின் பிரகாரம் நிச்சயம் நடக்கும். எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை.
நாம் ஆட்சிக்குவந்த பிறகு இரு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து, முடிவொன்றை எடுப்பதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான அந்த குழு முன்வைக்கும் பரிந்துரைக்கமைய நாம் சட்டத்தின் பிரகாரம் செயல்படுவோம்.
மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தினால் தொகுதிக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாது.
பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் போதுமான பிரதிநிதிதித்துவத்தை வழங்க முடியாது. அதேபோல் ஊழல்மிக்க அரசியல் முறைமைக்கு ஏதுவாக அமையும் விருப்புத் தேர்தல் முறைமையையும் மாற்றியமைக்க முடியாது.
எனவே, ஜனநாயகம் என்பதற்காக சட்டத்துக்கு புறம்பாக சென்று செயல்பட முடியாது.
அதேபோல தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு பேர்போன கட்சியொன்றின் பிரதிநிதி இன்று தேர்தல் பற்றி கதைப்பதுகூட நாம் ஏற்படுத்திய சிஸ்டம் சேன்ச்தான்.” – என்றார் பிரதமர்.





