2029 இல் NPP அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: தேரர் சூளுரை
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 2029 இல் வீட்டுக்கு அனுப்புவோம். நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை இந்த சமரில் இருந்து ஓயமாட்டோம். தேரர்கள் எவரும் இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
நாமல் ராஜபக்சவை ஆதரித்து நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பில் தேரர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்த அரசாங்கம் பிக்குகளை மதிப்பதில்லை. நாட்டை மீட்ட படையினரையும் விமர்சித்துவருகின்றனர். இந்நாட்டில் தலைவர்களை பிக்குகளே அன்று முதல் இன்றுவரை உருவாக்கியுள்ளனர்.
நாட்டை சரியாக ஆளாவிட்டால் வீட்டுக்கும் அனுப்பியுள்ளனர். ஆட்சிமுறை குறித்து மன்னர்களுக்கு பாடமும் எடுத்துள்ளனர்.
வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தக்குரிய ஆலோசனைகளையும் பிக்குகளே வழங்கினர்.
எனவே, யுடியூப்பர்களை கூலிக்கு அமர்த்தி, பிக்குகளின் வாயை மெளிக்க வைப்பதற்கு ஆளுங்கட்சி முற்பட்டால் அந்த முயற்சி வெற்றியளிக்காது. மகாநாயக்க தேரர்கள் அனுப்பும் கடிதத்தை வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் பிக்குகளை மௌனிக்க வைக்க முடியாது. இந்த அரசாங்கத்துக்கு பிக்குகள் அஞ்சவில்லை.
இந்நாட்டில் பௌத்த தலைவரை பிக்குகளே உருவாக்குவார்கள். அதனால்தான் ஆட்சியாளர்கள் பிக்குகளுக்கு அஞ்சுகின்றனர்.
2029 இல் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம். அந்த சமரில் இருந்து பின்வாங்கமாட்டோம். “ – என்றார் தேரர்.




