ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்
ஈரானுக்கு சொந்தமான லாராக் (Larak) தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளுடன் கூடிய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) ஆயத்தமாவதை கவனித்ததை தொடர்ந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (Centcom) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகத் தெரிவித்த IRGC, இதற்குத் தகுந்த “பதிலடியும் தண்டனையும் வழங்கப் படும்” எனச் சூளுரைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோர்டான் எல்லைக்குள் ஏவுகணைகள் தடுப்பு
ஈரானின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, தமது வான்வெளியை அத்துமீறி நுழைந்த எட்டு ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து அழித்துள்ளதாக ஜோர்டான் ஆயுதப் படைகள் அறிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜூலை இறுதியில் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்த பிறகு நடைபெறும் முதல் தாக்குதல் இதுவாகும்.
உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணை, பாந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு மிக அருகில் லாராக் தீவு அமைந்துள்ளது.
ஈரான் தற்போது இத்தீவு வழியாகச் செல்லும் எண்ணெய் விநியோகக் கப்பல்களைச் சோதனையிட்டு வருவதுடன், அப்பாதையைக் கடக்க 2 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்டணமாக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி
லாராக் தீவுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ராக் ஆகிய அமெரிக்க தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதில் எதிரிகளின் போர் விமானங்கள், பராமரிப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளுக்குக் “கடுமையான சேதம்” விளைவிக்கப்பட்டுள்ளதாக IRGC கூறியுள்ளது.




