கடந்த 24 மணிநேரத்தில் மூவர் மரணம் – டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த போராடும் அரசு
நாட்டில் டெங்கு தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குறைந்தது 03 பேர் டெங்கு தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 74,478 ஆக உயர்ந்துள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டும் மொத்தம் 19,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேற்கு மாகாணம் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.




