ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்
ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அஸ்ராக் (Azraq) விமானத் தளம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜோர்டானின் அல்-அஸ்ராக் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தில் உள்ள போர் விமானப் பாதுகாப்புப் பெட்டகங்கள் (Fighter jet shelters) மற்றும் பெரிய ரன்வே (Aircraft parking ramp) ஆகியவற்றைக் குறிவைத்து, கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், “குறைந்தது இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல விமானங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன” என்றும் IRGC உரிமை கோரியுள்ளது.
ஜோர்டான் இராணுவத்திற்கு ஈரான் அழைப்பு
அமெரிக்கப் படைகளை இலக்கு வைக்குமாறு ஜோர்டான் இராணுவத்திற்கும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. “அத்துமீறி நுழைந்துள்ள இந்த அந்நிய இராணுவப் படைகள் சட்டபூர்வமான இலக்குகளாகவே கருதப்படுகிறார்கள்” என்றும் ஈரான் கூறியுள்ளது.
மேலும், “இந்த ஆக்கிரமிப்பாளர்களை எவ்வகையிலாவது ஒழித்துக் கட்டுவதும், அப்பாவி முஸ்லிம்களைக் கொல்லும் இந்தக் கொலையாளிகளிடம் இருந்து ஜோர்டானின் புனித பூமியைப் தூய்மைப்படுத்துவதும் உங்களது மத மற்றும் மனிதாபிமானக் கடமையாகும்” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




