‘கிஃபிர் சி12’ போர் விமானத்தின் சோதனையோட்டம் நிறைவு!
மேம்படுத்தப்பட்ட முதல் ‘கிஃபிர் சி12’ போர் விமானம், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இன்று (11) தனது சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இது, விமானப்படையின் ‘கிஃபிர்’ போர் விமான நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
‘சிங்கக் குட்டி’ என்று அழைக்கப்படும் 10-வது போர் விமானப் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த போர் விமான நவீனமயமாக்கல் திட்டம், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
‘கிஃபிர் சி12’ விமானத்தில் நவீன டிஜிட்டல் கிளாஸ் காக்பிட் ஏவியோனிக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது விமானியின் பணியை கணிசமாக எளிதாக்கி, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது என்று விமானப்படை கூறியுள்ளது.
மேலும், மேம்படுத்தப்பட்ட சென்சார் மற்றும் பல்முனை ரேடார் திறன்கள், இலக்குகளை அடையாளம் காணும் திறனையும் சூழ்நிலை விழிப்புணர்வையும் மேம்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





