அனைத்து குற்றச்செயல்களிலும் எதிர்கட்சியே பிரதான குற்றவாளி – அனுர சாடல்
ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தையும் ஒடுக்க வேண்டும் என்றும், அதற்காக சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்திலும் எதிர்க்கட்சியே பிரதான குற்றவாளியாகிவிட்டது என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி திசாநாயக்க இந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், குற்றவியல் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் முதல் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் வரை அனைவரும் எதிர்க்கட்சியின் எதிரிகளாகிவிட்டனர் எனத் தெரிவித்தார்.
இராணுவத்திலோ அல்லது உளவுத்துறைகளிலோ உள்ள சிறு குழுக்கள், அரசின் பொருட்டும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அதிகாரத்திற்காகவும், ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்திற்காகவும் சில காரியங்களைச் சாதித்திருந்தால், நமது அரசாங்கம் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கத் தயங்காது என்றும் கூறினார்.
அதேநேரம் ஒரு சிறிய குழுக்கள் அரசியல் நோக்கத்துடன் கொலைகளை செய்ததாக சுட்டிக்காட்டிய அவர், கொடூரமான குற்றங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவது நமது உறுதியான கடமையாகும் எனவும் குறிப்பிட்டார்.




