திருகோணமலையில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை!
திருகோணமலை – மட்டிக்களி பிரதான வீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட திருகோணமலை மாநகரசபை தடை விதித்துள்ளது.
குறித்த இடத்துக்கு இன்று (24) விஜயம் மேற்கொண்ட முதல்வர் க.செல்வாஜா உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுடன் கலந்துரையாடி மாற்றிடத்தை வழங்கினர்.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி பகுதியில் முன்னெடுக்கப்படும் நடைபாதை வியாபாரத்தில் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையிலேயே அங்கு நடைபாதை வியாபாரத்தை மேற்கொள்ள மாநகரசபை தடை விதித்துள்ளது.
பிரதான வீதியில் நீண்டகாலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற 8 வியாபாரிகளுக்கு, மாநகரசபையால் அமைக்கப்பட்ட வண்டியில் விநாயகபுரம் வீதியில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டள்ளது.






