போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்தல்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாரிஸில் உள்ள எலிசே அரண்மனை சென்றடைந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்திக்க உள்ளார்.
சந்திப்புக்கு முன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஸ்டார்மர், ஈரானில் நடைபெறும் போரால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை குறைப்பதற்கும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கும் தாம் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்தார்.
“போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்கான ஒப்பந்தமும் அவசியம். ஹார்முஸ் நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.
மேலும், ஈரானில் நடைபெறும் போரின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்பதால், நாடுகள் கூட்டணியாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்காக இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் இராணுவத் திட்டமிடல்கள் ஆகிய மூன்றிலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹாமுஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை மீட்டெடுக்க சுமார் 40 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் கூட்டத்துக்கு ஸ்டார்மரும் மக்ரோனும் இன்று பிற்பகல் இணைந்து தலைமை தாங்க உள்ளனர்.





