அடிமைத்தனத்திற்கான இழப்பீடு : மன்னர் சார்லஸிடம் மனுக்கொடுக்க தயாராகும் ஜமைக்கா
அடிமைத்தனத்திற்கான இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பாக சட்ட வழிகாட்டுதலைப் பெற ஜமைக்கா அதிகாரிகள் மன்னர் சார்லஸிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளனர்.
இதற்காக வரும் செப்டம்பர் மாதம் அவர்கள் இங்கிலாந்திற்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கரீபியன் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட கலாச்சார அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச் (Olivia Grange), இந்தப் பயணம் செப்டம்பர் 06 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு பெறுவதற்கான முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கான கோரிக்கை கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஆப்பிரிக்கர்களை ஜமைக்காவிற்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்றது சட்டப்பூர்வமானதா, அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமா, அடிமைத்தனம் மற்றும் அதன் நீடித்த விளைவுகளுக்காக ஜமைக்காவிற்கு இழப்பீடு வழங்க பிரித்தானியா கடமைப்பட்டுள்ளதா? என்பது குறித்து லண்டனைத் தளமாகக் கொண்ட பிரிவி கவுன்சிலின் நீதித்துறை குழுவிடம் சட்ட ஆலோசனை பெற மன்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் “ஜமைக்காவின் தேசத் தலைவர் என்ற தகுதியில், அவரிடமிருந்து நாங்கள் பாதுகாப்பை எதிர்பார்க்கிறோம்” என்ற அடிப்படையில் மன்னர் சார்லஸிடம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கரீபியன் சமூகத்தின் (Caricom) முழு ஆதரவும் பிரித்தானியாவிற்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “1781-ஆம் ஆண்டு ஸோங் என்ற அடிமைக் கப்பல் 442 அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களுடன் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜமைக்காவிற்குப் புறப்பட்டது.
பயணம் முழுவதும் கப்பல் சிக்கலில் மாட்டிக்கொண்டது. சரக்கு இழப்பிற்கான காப்பீட்டைப் பெறுவதற்காக, அதன் தலைவர் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களை கடலில் வீசினார். இதில் 140 அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இறுதியாக, 1781 டிசம்பர் 21 அன்று, கப்பல் பிளாக் ரிவர் துறைமுகத்தை வந்தடைந்தது.
1834-ல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபோது, இங்கிலாந்து அரசாங்கம் £20 மில்லியன் இழப்பீட்டை வழங்கியது.
புதிதாக விடுதலை பெற்ற ஆப்பிரிக்கர்கள், தோட்ட உரிமையாளர்களுக்குக் கூடுதலாகப் பல ஆண்டுகள் இலவச உழைப்பை வழங்க நிர்பந்திக்கப்பட்டனர். இதன் மூலம், அவர்கள் தங்களின் சுதந்திரத்திற்காகத் தங்களை அடிமைப்படுத்தியவர்களுக்குப் பணம் செலுத்தினர்.
மன்னிப்பு மற்றும் நிலப் பரிமாற்றம் மூலம் அந்த சமூகத்திற்கு உள்நாட்டு இழப்பீடுகளை வழங்கி ஜமைக்கா அரசாங்கம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜமைக்காவின் தேசிய இழப்பீட்டு மன்றத்தின் (NCR) தலைவரான லலேட்டா டேவிஸ் மாட்டிஸ், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதை “இழப்பீட்டு நீதிக்கான எங்களின் நீண்டகால முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்” என்று விவரித்துள்ளார்.




