“மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது’
“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்துகளை முன்வைக்கலாம்; ஆனால், அது தொடர்பாக வெளிநாடுகளால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது” என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்புகையில், “மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அவர் அழுத்தம் கொடுத்துள்ளாரே?” எனக் கேட்டார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“இலங்கை ஒரு சுதந்திர நாடாகும். எனவே, அரசியல் ரீதியாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. ஆனால், தங்கள் கருத்துகளைக் கூறிவிட்டுச் செல்ல முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, “அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு மக்கள் ஆணை உள்ளது. இவ்விஷயத்தில் மக்கள் ஆணைக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கும்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





