சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்!பொலிஸார் வலை
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.
தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார்.
நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மேசன் வேலை (கட்டுமானப் பணி) செய்து கொண்டிருந்த நிலையில், உத்தியோகத்தர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடித் தலைமறைவாகியுள்ள பத்மராஜா டினேஸைக் கைது செய்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துச் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





