” தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவே விலை உயர்வு”
“தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். விலைகுறைப்பை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்வோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“உலக சந்தையில் எண்ணெய் விலை உச்ச மட்டத்தில் காணப்படுகின்றது. கடந்த முறையும் இந்நிலைமையே காணப்பட்டது. ஆனால் அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் ஒரு தொகையை தாங்கிக்கொண்டே சிறு அளவில் அதிகரிப்பை மேற்கொண்டன.
உலக அளவில் பிரச்சினை காணப்படுகின்றது. தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்வதே தற்போது எமது முதன்மை நோக்கமாகும்.
சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் இங்கு கியூஆர் முறைமையை மட்டுமே அமுல்படுத்தினோம்.
பொருளாதாரத்தை முடக்க முடியாது. தடையின்றி தொடர வேண்டும். இது கொரோனா காலம் போன்ற நிலை அல்ல. மாறுபட்ட சவால்மிகு சூழ்நிலை ஆகும்.
சுற்றுலாத்துறை, பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை என்பன உள்ளிட்டவற்றைக் கருத்திற்கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே எரிபொருள் விலை குறைக்கப்படும்.” – என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ.




