இஸ்ரேல் – லெபனான் ஒப்பந்தம் அமுலாகாமை குறித்து வத்திக்கான் கவலை
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) மற்றும் போப் லியோ (Pope Leo XIV) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது.
” ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்ற திருப்பீடம் (Holy See), அதை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அமைதிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளது” எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் தேசிய செய்தி முகமையின் தகவலின்படி, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தவும், ஆக்கிரமிப்புகளை முடிவுக்குக் கொண்டுவரவும் லெபனானின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக போப் லியோ மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அவ்ன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், “இஸ்ரேல் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதையும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவதையும் கட்டாயமாக்குவது உள்ளிட்ட லெபனானின் முதன்மையான கோரிக்கைகளுக்குப் போப் தொடர்ந்து தனது ஆதரவை வழங்க வேண்டும்” என்றும் லெபனான் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.




