ட்ரம்பின் பாதுகாப்பு உத்தரவாதம் கோரிய மோடி
இந்திய கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியுள்ளார்.
பிரான்ஸில் நடைபெற்ற G7 மாநாட்டில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால் இரு நாடுகள் இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது.
இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு ஜனாதிபத ட்ரம்பை , பிரதமர் மோடி மீண்டும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றது.
மாநாட்டின் இறுதி நாளான நேற்று, பிரித்தானியா, கனடா, இத்தாலி பிரதமர்கள், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் ஜயாத் அல் நயான் உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனும் பிரதமர் மோடி தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது உலக அளவில் உள்ள கடல் சார் பணியாளர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும், இந்தியக் கடல்சார் பணியாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற அமெரிக்கா உதவவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் ஓமான் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் இருநாட்டு உறவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்தே இந்த விவகாரத்தை பிரதமர் மோடி, ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் எடுத்துரைத்தார் என்று தெரியவந்துள்ளது.





