மனைவியை கொலை செய்து உடலைத் துண்டித்த கணவர் சரணடைவு
அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன 25 வயதுப் பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாகியிருந்த பெண்ணின் கணவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06), குறித்த தம்பதியினர் வசித்து வந்த குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாகத் தம்பதியினரைக் காணவில்லை என்றும், அவர்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை என்றும் அண்டை வீட்டார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பொலிஸார், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்டனர். சடலத்தின் விரல்களும் பாதியளவு வெட்டப்பட்டிருந்ததோடு, உடல் அழுகத் தொடங்கிய நிலையிலும், தலை காணாமலும் இருந்தது.
விசாரணையில், உயிரிழந்த பெண் ரியா தாலுக்தார் (Riya Talukdar) என அடையாளம் காணப்பட்டார்.
வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், குளிர்சாதனப் பெட்டிக்குள் (Refrigerator) பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலையைக் கண்டெடுத்தனர்.
சம்பவ இடத்திலிருந்து தலைமறைவாகியிருந்த பெண்ணின் கணவரை அண்டை வீட்டார் வெள்ளிக்கிழமை கடைசியாகப் பார்த்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, சடலம் மற்றும் துண்டிக்கப்பட்ட தலை என்பன உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், தலைமறைவாகியிருந்த கணவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சந்தேகநபரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, இதுவரை திரட்டப்பட்ட சான்றுகளுடன் ஒப்பிட்டு மேலதிக விசாரணைகளைக் கொண்டுசெல்லப் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த கொடூரக் கொலைக்கான காரணம் குறித்தோ அல்லது அவர் சரணடைந்த சூழ்நிலை குறித்த விவரங்களையோ பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.




