பிரித்தானியாவில் வட்டி விகிதம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
பிரித்தானியாவில் வட்டி விகிதத்தை 3.75 என்ற சதவீதத்திலேயே தொடர்ந்து பேண அந்நாட்டின் பணவியல் கொள்கைக் குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில், 6இற்கு 03 என்ற வித்தியாசத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஈரான் தொடர்பான மோதல்களால் எரிசக்திச் செலவுகள் அதிகரித்ததன் விளைவாகப் பணவீக்கம் 3.1 சதவீதமாக உயர்ந்தமையால் வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மத்திய வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தை மாற்றாமல் அப்படியே தக்கவைக்க தீர்மானித்துள்ளது.
மெதுவான பொருளாதார வளர்ச்சி, 5 சதவீத வேலையின்மை, குறைந்து வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதிய உயர்வு வேகம் குறைதல் போன்ற சவாலான சூழலுக்கு மத்தியில் மத்திய வங்கி செயல்பட்டு வருகிறது.
இது நாட்டின் சிக்கலான பொருளாதார நிலையை வெளிச்சம்போட்டு காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை வாழ்க்கைச் செலவு தொடர்பான நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் அடிப்படை வட்டி விகிதம் குறைந்தது 4 சதவீதத்தை எட்டக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும்பாலான ஆய்வாளர்களும் நிதிச் சந்தைகளும் நவம்பர் மாதத்தில் வட்டி விகித உயர்வு இருக்கும் என்று கணிக்கின்றனர்.




