யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து – 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் தீக்கிரை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், 60 சதவீதத்திற்கும் அதிகமான மருந்துகள் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளன.
இந்தத் தீ விபத்து நேற்று இடம்பெற்ற நிலையில் அந்தப் பகுதியைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான சிறிபவானந்தராசா ஊடகங்களுக்கு இன்று இது குறித்துத் தெளிவுபடுத்தினார்.
தீயில் எரிந்த மருந்துகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான, பெறுமதிமிக்க மருந்துகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வைத்தியசாலையின் உள்ளக மருந்தகத்தில் தற்போதுள்ள மருந்துகளைக் கொண்டு அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகள், வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளிலிருந்தும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் இருந்தும் உடனடியாக மருந்துகளைக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்குத் தடைகளின்றி மருந்துகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய, கொழும்பில் இருந்து அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.





