ஹவுத்திகள்மீது தாக்குதல் வேண்டாம்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் தனது தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோளிட்டு Haaretz நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலியத் தலைவர்கள் , இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாக இராஜதந்திர வழியைப் பின்பற்ற வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹவுத்திகளின் நிலப்பரப்பு ஆக்கிரமிப்புகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ‘பாப் அல்-மண்டப்’ (Bab al-Mandab) நீரிணை மீதான அவர்களின் புதிய ஆதிக்கத்தை எதிர்கொள்ள சர்வதேசக் கூட்டணி ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுத்தி விவகாரத்தைச் சர்வதேச சமூகத்தின் நலன்களுடன் இணைப்பதன் மூலம், சர்வதேச ரீதியிலான விவாதங்களின் மையத்தில் ஈரானைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும் என அப்பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்தால், இஸ்ரேலுக்கு எதிராக ஹவுத்திகளை ஈரான் களமிறக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறை எதிர்கொள்ள இஸ்ரேல் ஆயத்தமாகி வருவதாகவும் Haaretz செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, காசா மீதான இஸ்ரேலின் போரின் போது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேலும் பரஸ்பரத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




