தற்செயலாக பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்த இந்திய விமானம் – விமானி பணிநீக்கம்
தலைநகர் டெல்லியிலிருந்து வடக்கு நகரமான அமிர்தசரஸுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் சிறிது நேரம் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்ததைத் தொடர்ந்து, விமானி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின்போது அந்த விமானி ஏர்பஸ் ஏ321 ரக விமானத்தை இயக்கியுள்ளார்.
விமானம் அமிர்தசரஸை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பறவை மோதல் குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தை நிறுத்தி வைக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. (DGCA) தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தலுக்கு அமைய விமானம் தரையிறங்கியபோது தற்செயலாக பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.
இந்த நிகழ்வு பாகிஸ்தான் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் ஒருங்கிணைப்போடு, இறுதியாக, டெல்லிக்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – இந்தியாவிற்கு இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக இந்தியாவிற்கான வாான்வெளியை பாகிஸ்தான் மூடியுள்ளது.
இந்நிலையில் குறித்த விமானம் பாகிஸ்தான் வான்வெளிக்குள் பிரவேசித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும். விசாரணைகளுக்காக விமானி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




