நீதிக்கான இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது?
“செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பான போராட்டங்களை அரசியலாக கருத வேண்டாம். அது நீதிக்கான குரல். எனவே, செம்மணி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ முன்னாள் நீதி அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் யாழ்ப்பாணம் வந்தனர். மக்களைச் சந்தித்து வாக்குறுதி அளித்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
தற்போதைய நீதி அமைச்சரும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகைத் தந்திருந்தார். செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அதன்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த போரட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது என்று குறிப்பிட கூடாது. அது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆதங்கம் மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகும்.
இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது?” – என்றார்.




