உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை : 96 பேர் உயிரிழப்பு!
வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பருவம் தவறிய கடுமையான புயல், கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக குறைந்தது 96 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் நிலைமை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மின்விநியோகத் தடை மற்றும் அலைபேசிகளை அடைய முடியாத நிலை ஏற்பட்டமையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தடைபட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், சேதங்களை முழுமையாக மதிப்பிடுவதிலும் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
புயல், மின்னல் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால்” 89 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் முதலில் தெரிவித்த நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கையை 96 ஆக உயர்த்தினர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





