தமிழர் விடயத்தில் ராஜபக்ச வழியிலேயே அநுர: இடதுசாரி தலைவர் குற்றச்சாட்டு!
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டத்தில் ராஜபக்ச அரசாங்கம் கையாண்ட சில்லறைத்தனமான அணுகுமுறையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பின்பற்றிவருகின்றது என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் குறித்து வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“வீதி அமைத்தல், பாலம் அமைத்தல் போன்ற அபிவிருத்தி திட்டங்களே தேசிய இனப்பிரச்சினைக்கான அணுகுமுறையென ராஜபக்ச அரசாங்கம் கருதியது. ஆனால் அந்த சில்லறைத்தனமான அணுகுமுறையை தமிழ் மக்கள் நிராகரித்தனர்.
தேசிய மக்கள் சக்திமீதிருந்த நம்பிக்கை காரணமாகவே அக்கட்சிக்கு தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தனர். ஆனால் இனப்பிரச்சினை விடயத்தில் என்பிபி அரசும் சில்லறைத்தனமான அணுகுமுறையையே கையாள்கின்றது.
வீதி அமைப்பதால், வடிகாண் அமைப்பதால் இனப்பிரச்சினை தீருமா? இல்லை.
தேசிய மக்கள் சக்தி வழங்கிய போலி வாக்குறுதியை நம்பி ஏமாந்துவிட்டோம் என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், இனப்பிரச்சினை விடயத்திலாவது பொதுக் கொள்கையுடன் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு இல்லையேல் இந்த அரசாங்கத்திடம் உரிமைகளை பெறமுடியாது.” – என்றார்.





