“ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதி நடைபயணம் இன்று நிறைவு
உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிப் நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இன்று நண்பகல் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகும் இந்த அமைதி நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட அரச நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி தம்புள்ளையில் இருந்து ஆரம்பமான இந்த “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதி நடைபயணம், நேற்றைய தினம் யக்கலையில் இருந்து களனி ரஜமகா விகாரையை வந்தடைந்திருந்தது.
இந்த நடைபயணம் காரணமாக இன்று கொழும்பின் சில வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





