இலங்கையில் கோர விபத்து: ஐவர் பலி – மூவர் காயம்
மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளவாய – மொனராகலை வீதியின் கும்புக்னை ‘களு பாலத்திற்கு’ அருகில், வெள்ளவாயவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று, எதிர் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது உழவு இயந்திரத்தின் பின்னாலுள்ள பெட்டியில் (Trailer) பயணித்த 10 பேரில் 8 பேர் பலத்த காயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 ஆகிய வயதுடைய தொடம்கஸ்லந்த, புத்தள மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூவரும் தற்போது மொனராகலை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் லொறியின் சாரதியும், டிராக்டரின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




