சோமாலிய பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடு: EU அதிரடி முடிவு
ஐரோப்பிய ஒன்றியத்தால் சோமாலியர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சோமாலியர்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துக்கொள்ள அந்நாட்டு அரசு மறுத்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த சோமாலிய ஜனாதிபதி, தமது நாட்டு மக்களை ஏற்கத் தயார் எனவும், மொழி தெரியாத ஏனைய நாட்டு நபர்களை சோமாலியர்கள் எனக் கருதி திருப்பி அனுப்புவதையே எதிர்ப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
1991 இல் மத்திய அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் 2006 முதல் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் தொடர்ச்சியான தாக்குதல்களால் சோமாலியாவால் மீண்டெழ முடியவில்லை.
இத்தகைய சூழ்நிலைகளே சோமாலிய இளைஞர்களை ஆபத்தான முறையில் லிபியா வழியாக ஐரோப்பாவிற்கு புலம்பெயரத் தூண்டுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகளின்படி,
சோமாலிய பிரஜைகளுக்கு இனி ‘மல்டிபிள்-என்ட்ரி’ (Multiple-entry) விசாக்கள் வழங்கப்பட மாட்டாது.
இராஜதந்திர கடவுச்சீட்டு (Diplomatic Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா கட்டண விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் சாதாரண காலம் 15 நாட்களிலிருந்து 45 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விசா கட்டுப்பாடுகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை.
மொகடிஷு அரசாங்கத்தை தங்கள் நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்க வைப்பதற்கான ஒரு அழுத்தமாகவே ஐரோப்பிய ஒன்றியம் இதனைப் பயன்படுத்துகிறது.
ஏற்கனவே காம்பியா (2021) மற்றும் எத்தியோப்பியா (2024) ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




