உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பொறுப்பு!
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டறிய வேண்டியது அரசின் பொறுப்பாகும். இது விடயம் தொடர்பில் பொறுப்புகூறல் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு ,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள், பிரதான சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடையோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தோம்.
ஆனால் தேர்தலில் மக்கள் எமக்கு வாய்ப்பளிக்கவில்லை. ஆட்சியை அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைத்தனர்.
எனவே, பிரதான சூத்திரதாரி மற்றும் சூழ்ச்சியாளர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இந்த பொறுப்புகூறலை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். இது விடயத்தில் சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரணியில் இருந்தாலும் நாம் ஆதரவு வழங்குவோம்.” – என்றார் அஜித் பி பெரேரா.




