திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாரளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், சிறிநாத், கோடீஸ்வரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் முக்கியப் பிரமுகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்நினைவேந்தலின் போது அமரர் இரா.சம்பந்தநின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி மற்றும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலந்துகொண்ட தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் அவரது அரசியல் ஆளுமை குறித்த ஞாபகார்த்த உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அவரது நீண்டகால அரசியல் வாழ்க்கை வரலாறு, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புகள், நாடாளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் அவர் பதித்த தீர்க்கமான அரசியல் தடயங்கள் மற்றும் அவரது தூரநோக்குச் சிந்தனைகள் குறித்து இதன்போது விரிவாக நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




