திட்டமிட்டு காயப்படுத்தும் செயல்: வரிப்போர் குறித்து கனடா பிரதமர் அதிருப்தி
கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு “தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை காலை கனடிய மக்களுக்கு ஆற்றிய உரையில், “அவர்கள் மிக அதிகமாகக் கேட்டார்கள்; ஆனால் மிகக் குறைவாகவே வழங்கினார்கள்” என்று கனடா பிரதமர் கார்னி குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவின் கடுமையான புதிய வரிகளைத் தொடர்ந்து, நாடு தற்போது ஒரு வர்த்தக “போரில்” ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 8 முதல் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் மீதான வரிகள் உட்பட அமெரிக்க வரிகளுக்கு நிகராக “டாலருக்கு டாலர்” திருப்பி பதிலடி வரிகள் விதிக்கப்படும் என்பதைப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான ஆழமான ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக உறவை இந்தப் பேச்சுவார்த்தை முறிவு நிலைகுலையச் செய்துள்ளதுடன், இதற்குத் தீர்வுகாண்பதற்கான தெளிவான பாதையும் இதுவரை தென்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
வாரத்தின் தொடக்கத்தில் இரு நாடுகளும் ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருந்தபோதிலும், இரு தரப்பும் கடைசி நேர மாற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டியதை அடுத்து பேச்சுவார்த்தைகள் முறிந்தன.




