தமிழகத்தில் பிரச்சாரப்போர் நாளையுடன் ஓய்வு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார போர் நாளை (21) மாலை 6 மணியுடன் முடிவடைகின்றது.
இந்நிலையில் இறுதி கட்ட சூறாவளிப் பிரசாரத்தில் தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் 15 ஆம் திகதி வெளியானது. இதற்கமைய ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும்.
இத்தேர்தலில் தமிழகத்தில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 1977-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் எளிதாக வந்து வாக்களிக்க, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் திகதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.





