மீண்டும் வெள்ள அபாயம்: நேபாளத்துக்கு எச்சரிக்கை
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள ஏரிகள் உடையும் அபாயம் நிலவுவதால், பேரழிவுப் பகுதியில் புதிய வெள்ளப்பெருக்கு உடனடியாக ஏற்படக்கூடும் என நேபாள மற்றும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நேபாளத்தில் குறைந்தது 469 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் உட்பட சுமார் 1,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
திபெத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னமும் மூன்றாகவே உள்ள நிலையில், 550க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முழு கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், ஆழமான சேற்றிலிருந்து தப்பியவர்களையும் சடலங்களையும் மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியா உதவி
அதேவேளை, காணாமல்போன 39 ஆஸ்திரேலியர்களில், அமெரிக்காவைச் தளமாகக் கொண்ட ‘இமாலயன் கிளேசியர்’ (Himalayan Glacier) என்ற மலையேற்ற நிறுவனத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு சிட்னியைச் சேர்ந்த வெங்கடராமன் பாலகிருஷ்ணன் (52) மற்றும் அவரது மனைவி சித்ரா வெங்கடராமன் (46) ஆகியோரும் அடங்குவர்.
ஆஸ்திரேலியா 5 மில்லியன் டாலர் உதவித் திட்டத்தை வழங்கும் என்றும், மனிதநேய உதவிப் பணிகளுக்குத் துணைபுரிய நேபாளத்திற்கு கூடுதல் அதிகாரிகளை அரசாங்கம் அனுப்பி வருவதாகவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
நேபாளத்தில் ஆஸ்திரேலியாவின் 20 பணியாளர்கள் உள்ளதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் நான்கு அதிகாரிகளையும், அடுத்த சில நாட்களில் இரண்டாவது குழுவையும் அப்பகுதிக்கு அரசு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




