நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இருக்கை பட்டிகள் அணிவது இன்றுமுதல் கட்டாயம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டைகள் அணிவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொழிற்சாலையிலிருந்து இருக்கைப் பட்டைகள் பொருத்தப்படாத பழைய வாகனங்களுக்கு அந்த வசதியை வழங்குவதற்காக, அரசாங்கம் நான்கு முறை வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் கால அவகாசம் வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாகவும் குறிப்பிட்டார்.
இன்றுடன் கால அவகாசம் முடிவடைவதால், இன்று நள்ளிரவுக்குப் பிறகு இருக்கைப் பட்டைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே அதிவேக நெடுஞ்சாலைகளில் சட்டப்பூர்வமாக இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





