புங்குடுதீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த மூன்று மீனவர்களும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று மீனவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கரை திரும்பாமல் காணாமல்போயிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
கடற்றொழில் அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைவாக, கடற்படையினர் தமது படகுகள் மூலம் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய ஆழ்கடல் பரப்புகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் பலனாக, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மீனவர்கள், நேற்று குறிகட்டுவான் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு கூடிவிருந்த அவர்களது உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுவதற்கும், மீனவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்விலும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





