இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் முக்கிய நாடுகள்!
சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளின் ஒரு தொகுதியை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புது டெல்லியில் இந்திய மற்றும் சைப்ரஸ் தூதர்களுக்கு இடையே நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் தனது பாதுகாப்பு நிலையை வலுப்படுத்துவதற்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதில் கிரீஸ் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிடமிருந்து சைப்ரஸ் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்குவது கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள ஒட்டுமொத்த இராணுவ சமநிலையையும் மாற்றும் என்று துருக்கிய பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2026-2030 பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட கிரீஸ் முடிவு செய்துள்ளதாகவும், அதில் கூட்டு இராணுவப் பயிற்சி, துறைமுக மற்றும் கடல்சார் பாதுகாப்பு, மற்றும் இணைய மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



